இடம் : ரயில் பெட்டி
ஒருவழியாக எனது Compartment ' ஐ கண்டுபிடித்து என் இடத்தை பிடித்து, ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் உட்கார்ந்தேன் .
எதிரில் என்னை போல், என் வயது உள்ள ஒருவர் உட்கார்ந்திருந்தார் .
TTR வரும் வரை பேச்சு துணைக்கு ஆச்சு என்று பேச ஆரம்பித்தேன், வழக்கம் போல்
சார், Fan போட்டுக்கவா , சென்னை செம வெயில் இல்ல சார் ? என்றேன் தலை அசைந்தது மெதுவாக.
“அப்புறம் சார், என் பேர் ஆதி” என்று கை நீட்டினேன்
அவரும் கை கொடுத்தார், பெயர் சொல்லவில்லை .
இருந்தாலும் TTR வராத காரணத்தால், மற்றும் Compartment' ல் எந்த Figure' ம் இல்லாத காரணத்தால் பேச்சை தொடர்ந்தேன்.
"சார், உங்க பேரு?"
"விடுதலை"
"எது காந்தி தாத்தா வாங்கி தந்தாரே " என்று மொக்கை ஜோக் அடித்தேன்
மொக்கையை தாங்கி கொண்டு மெலிதாக சிரித்தார் .
அப்போது என் phone சிணுங்கியது, என் கேர்ள் Friend
(வழக்கம் போல் சிரிப்பில் ஆரம்பித்து வெறுப்பில் முடிந்தது)வேறு யாரும் இல்லாத காரணத்தால் அவரிடமே புலம்பினேன்
"யாரையும் லவ் மட்டும் பண்ணிராதீங்க சார், பொண்ணுங்கனாவே கடுப்பு ஆவுது"
மறுபடியும் ஒரு புண்சிரிப்பு( முதலில் மூன்றாம் பிறையாக , இப்பொழுது சற்று மலர்ந்திருந்தது )
"அப்புறம் எந்த கட்சிக்கு சார் ஓட்டு போட்டிங்க ?"
" எனக்கு ஓட்டு உரிமை இல்லை "
"ரொம்ப நல்லது சார், இங்க எந்த தலைவன் ஒழுங்கா இருக்கான் ஓட்டு போட, எங்க பாத்தாலும் ஒரே லஞ்சம், ஊழல், எதுக்கு எடுத்தாலும் காசு, பேசாம எங்கையாவது வெளிநாட்டுக்கு போயிரலாம்'னு இருக்கு "
இதை சொல்லி முடிக்கும் போது அவர் கண்களில் சற்று மாறுதலை பார்த்தேன்.
அவர் உண்மையாக பேச தொடங்கினார்.
"ஐயா, நாடு ,தலைவன், காதலி, வேலை, இப்படி வாய்க்கு வந்த படி பேச சுதந்திரம், அனைத்தும் இருந்தும் நீங்கள் நாடு மாற துடிக்கிறீர்கள்,
ஆனால், ஒரு நாட்டை, தலைவனை, சொந்தங்களை, சுதந்திரத்தை தொலைத்த நாங்கள்
எங்கள் நாட்டில் இருக்கவோ அல்லது இறக்கவோ தான் ஆசை படுகிறோம் ".
(மனதில் விடை தெரிந்தாலும், நாக்கு முந்திக் கொண்டது)
"நீங்க..... எந்த நாடு?"
"யாழ்ப்பாணம் ... இலங்கை..."

